மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைஞர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மு.மேத்தா, பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரால் கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்ததுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுமை காரணமாக ஓய்விலிருக்கும் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று (03.06.2022) அன்று இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகெதமி விருது பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், "தென்னிந்தியாவின் இசைக்குயில்" என்றும், "மெல்லிசை அரசி" என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024