புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர்கள் யார் என்று போலீஸார் தகவல் வெளியிட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரத்தில், சாலையோரம் ஒரு கார் நின்றிருந்ததைப் பார்த்த பொது மக்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்ததில், காருக்குள் ஐந்து பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக, தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காரில் உயிரிழந்தது சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிகண்டன் அவரது குடும்பத்தினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதில் மணிகண்டனின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காணரமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். இவர் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தோடு காரில் அமர்ந்தபடியே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, மகள் 12ம் வகுப்பும், மகன் கல்லூரியும் படித்துவரும் நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் தானா அல்லது வேறு ஏதாவது கந்துவட்டி பிரச்னையா உள்ளிட்ட கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது உடல்கள் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.