புதுடெல்லி,
தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல் முறையாக டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது;
"பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், நிறைய வளங்களைக் கொண்டவர். ஆனால் அவர் கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒருவித ஆற்றல் நமக்கு உதவி செய்கிறது. இருக்கும் கடவுள் நம்முடன் இருக்கிறார். நான் சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
எதிர்க்கட்சியில் உள்ள எனது சகாக்கள் மணீஷ் சிசோடியாவையும் என்னையும் இங்கு பார்க்க வருத்தப்படுவார்கள். எனக்கு பதவி ஆசை இல்லை, 3 முறை பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
என்னை சிறைக்கு அனுப்பி டெல்லியில் பணியை நிறுத்தினர். சாலைகளும் சேதமடைந்தன. இது மட்டுமே அவர்களின் நோக்கம். இன்று டெல்லி பல்கலைக்கழக சாலையை முதல் மந்திரி அதிஷியுடன் ஆய்வு செய்தேன். சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். டெல்லியில் உள்ள பிற சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை." என்றார்.