கோவை: கோவை மாவட்டம் அத்திப்பாளையம் பகுதியில், பெண்ணின் சடலம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கோவை கணபதி அடுத்த சக்தி சாலையில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு, அவ்வழியாகச் சென்றவர்கள் சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்குச் சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலியானாவர், 60 முதல் 70 வயது கொண்ட மூதாட்டி என்பதும், கொலை செய்யப்பட்டு முள்வேலி அருகே தூக்கி வீசப்பட்டு பிணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மூதாட்டியை குற்றவாளிகள் பெட்ரோல், டீசல் போன்ற பொருள்களைக் கொண்டு எரிக்கவில்லை எனவும், அதனால் தான் உடல் முழுவதும் எரியாமல் இருந்ததாகவும், வேறு ஏதோ எரிபொருளைக் கொண்டு உடல் எரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் மூதாட்டியைக் காணவில்லை என எந்தப் புகாரும் வரவில்லை என்றும், எனவே, கொலை செய்யப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர், இங்குள்ள உறவினர் வீட்டுக்கு ஏதேனும் வந்தவரா? வேறு பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை யாரேனும் கொலை செய்து இங்குக் கொண்டுவந்தார்களா? அல்லது மாமியார் – மருமகள் சண்டை காரணமாக கொலை நடந்து உள்ளதா? சொத்துப் பிரச்னையா? என வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.