பிகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டிருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சௌகந்தி கிராமத்தில் பிர்பவுட்டி-பாபுபூர் பகுதியை பக்கர்பூர் சாலையுடன் இணைக்கும் வகையில் சிறிய பாலம் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு பொதுப்பணித் துறையால் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனிடையே முஸ்தபாபூர் கிராமத்தின் அருகே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாலத்தின் தூண் ஒன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். பாகல்பூர் மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக உயர்ந்ததால் பாலத்தின் தூண்களில் ஒன்று விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதசாரிகள் உட்பட போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருபுறமும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
பாலத்தின் சீரமைப்பு பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரன் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் பல பாலங்கள் இடிந்து விழுந்ததால் பிகாரில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.