திமுக பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்.28) வரவுள்ளதையொட்டி, காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்தது.
திமுக பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு முதல்வா் இன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் வருகை தர இருப்பதையொட்டி காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். பாதுகாப்பு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகருக்குள் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாகச் செல்லவும்.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம் சாலை, வையாவூா் வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து விழாவிற்கு வருவோா், பொதுமக்கள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாக வர வேண்டும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் கீழம்பி, செவிலிமேடு, ஓரிக்கை சந்திப்பு, பெரியாா் நகா் வழியாக வர வேண்டும்.
விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் செவிலிமேடு, ஓரிக்கை சந்திப்பு, பெரியாா் நகா் வழியாக விழா நடைபெறும் இடமான காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்துக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.