தூய்மை சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: வருமானவரி தலைமை ஆணையர் அழைப்பு
சென்னை: ‘வருங்கால சந்ததியினருக்கான தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு குடிமகனிடமும் தூய்மையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்வச் பாரத் இயக்கம் தொடங்கப்பட்ட 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தூய்மையே சேவை என்ற பிரச்சாரம், செப்.17 முதல் அக்.2-ம் தேதி வரை ‘தூய்மைசுபாவம் – தூய்மை கலாச்சாரம்' என்ற கருப்பொருளுடன் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தூய்மை சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவில், தூய்மையின் முக்கியத்துவம் குறித்து தனியார் கல்லூரி மாணவர்களின் தெருமுனை நாடகம் நேற்று நடைபெற்றது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், சுய தூய்மை மற்றும் பொதுத் தூய்மை ஆகியவற்றின் அவசியத்தைப் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருமானவரி மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போது, ‘நமது வருங்கால சந்ததியினருக்கான தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தூய்மையின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.