விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டிற்கான பூமி பூஜை குறித்த தகவலை கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதையொட்டி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாநாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பதி லட்டு விவகாரம்- ரஜினி சொன்ன பதில்
அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு கட்சிக்கும் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாமல் ஒழக்கத்தோடு செயல்பட வேண்டும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி தர வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். மாநாட்டில் விஜய் என்ன பேசவுள்ளார் என்பதை எதிர்பார்த்து அனைவரும் காத்துள்ளனர். ஒரு கூட்டத்தை கூட்ட 25 நாள்கள் ஆகும். ஆனால் விஜய் அழைத்தால் எந்த நாளாக இருந்தாலும் வரத் தொண்டர்கள் தயாராக உள்ளனர். இது விஜய்யின் குடும்பம்.
விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நாளை பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.