கோவை: மருதமலை கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் நான்கு வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் கட்டாய இ-பாஸ் பெற வேண்டும் என அறிவித்துள்ளனா்.
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு இருசக்கரங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
கோயிலில் போதிய இடவசதி இல்லாததால் அதிக அளவில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக முக்கிய விசேஷ நாள்களில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோயில் பேருந்தில் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
அக்.9 இல் மதுரையில் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்: இபிஎஸ் அறிவிப்பு
இந்த நிலையில், இந்து சமய அறநிலைத் துறை மற்றும் அறங்காவலர் குழு சார்பில் மலைப் பாதையில் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்
செல்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்கள் என ஒரு நாளைக்கு 300 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனா்.
மேலும் இ-பாஸ் நடைமுறை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மக்கள் கோயில் அலுவலகத்திற்கு தபால் மூலம் அல்லது இணையதளம் மூலம் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோயில் துணை ஆணையா் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.