மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் ஊசி போடப்பட்டதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு நோய்த்தொற்று காரணமாக குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 26 குழந்தைகளுக்கு நேற்று (செப். 27) இரவு செஃப்ட்ரியாக்சோன் எனப்படும் ஆன்டிபயாடிக் ஊசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடல் நடுக்கம், அதிக காய்ச்சல், உடலில் கொப்பளங்கள், வாந்தி போன்றவை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளன.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய மாவட்ட மாஜிஸ்திரேட் ஆன்டிபயாடிக் ஊசி போடப்பட்டதால் 16 குழந்தைகள் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 3 பேரை அவர்களின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், மேலும் 3 பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளனர். பாதிப்புக்குக் காரணமான ஆன்டிபயாடிக் ஊசியின் மாதிரி ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பயணியின் உணவில் கரப்பான்பூச்சி… மன்னிப்புக் கேட்ட ஏர் இந்தியா!
இந்த சம்பவத்தை அறிந்த பிறகு மருத்துவமனைக்கு வந்த சமூக ஆர்வலர் தருண் பஹேட்டி, உடல்நலக் குறைபாடுகளை அனுபவித்த ஐந்து குழந்தைகள் ஐசியுவில் வைக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், “ஆன்டிபயாடிக் மருந்து செலுத்தப்பட்ட பிறகு இவ்வளவு குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது மருத்துவமனையின் அலட்சியத்தைக் காட்டுகிறது. இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று குற்றம்சாட்டினார்.
ஆண்டிபயாடிக் ஊசியால் குழந்தைகள் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் புதிதாகத் திறக்கப்பட்ட பெட்டியில் இருந்து அந்த மருந்து எடுத்து வரப்பட்டதாகத் தெரிவித்தனர்.