ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது,
''இந்திய அணி பாகிஸ்தான் செல்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட் பயணங்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டியது பிசிசிஐ விதிமுறைகளில் ஒன்று. அதனால், இந்த விவகாரத்திலும் இந்திய அணி பாகிஸ்தான் செல்வது குறித்து அரசு முடிவு செய்யும். அதன்படி நடப்போம்'' என சுக்லா குறிப்பிட்டார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன.
படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்! விராட் கோலி புதிய சாதனை!
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 150 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2008 முதல் தற்போதுவரை இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளுக்காக பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.