2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கப்படுவதைக் காண அவர் வாழட்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை அகற்றும் வரை என் உயிர் போகாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென மயங்கிய கார்கே, பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசியபோது, எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை அகற்றும் வரை என் உயிர் போகாது. மக்களுக்கான என் போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தார் கார்கே.
இந்த நிலையில், கார்கேவின் பேச்சு அருவருப்பான மற்றும் அவமானகரமானது எனறு விமர்சித்திருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா, தனது தனிப்பட்ட உடல்நிலை விவகாரத்தில் பிரதமர் மோடியை இழுப்பது தேவையற்றது என்று தெரிவித்துள்ளார்.
வெறுப்பின் மீதான கசப்பான வார்த்தைகளை கொட்டியிருக்கிறார், காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மீது கொண்டிருக்கும் அச்ச உணர்வையும், அவர்கள் எப்போதும் பிரதமர் மோடியை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதையுமே காட்டுகிறது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கார்கேவின் உடல்நிலை சரியாக வேண்டும் என மோடி பிரார்த்தனை செய்கிறார், நானும், அனைவருமே பிரார்த்தனை செய்வோம், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று, அவர் நீண்ட காலம் வாழ வேண்டும், 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கப்படுவதைக் காண்பதற்காக, கார்கே வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.