மலை ரயில் பாதையில் மண்சரிவு: குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இன்று சேவை ரத்து
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இன்று (செப்.30) ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலை ரயில் பாதையில் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரன்னிமேடு ஆர்டர்லி ஹில்குரோவ் பகுதிகளில் மண்ணுடன் கற்கள் விழுந்துள்ளதால் தற்காலிகமாக இன்று ஒரு நாள் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உதகை – குன்னூர் இடையே இயக்கப்படும் மற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன.