“திமுகவில் உழைத்தோருக்கு தலைமை பதவி கிடைக்காது” – ஹெச்.ராஜா கருத்து
காரைக்குடி: திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா பிறந்தநாள் விழாவை அக்கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். இவ்விழாவில் பங்கேற்ற பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர தலைமைப் பொறுப்புக்கு யாரும் வர முடியாது என்பது உதயநிதியை துணை முதல்வராக்கியது மூலம் அறிய முடிகிறது.
நீதிமன்றத்தால் கண்டிப்பாக செந்தில் பாலாஜி தண்டிக்கப்படுவார். அவர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போது அமைச்சராக்கியுள்ளனர். பாஜகவில் எப்போதும் மோடி டீம் மட்டும்தான். எங்களுக்கு திமுக, அதிமுக ‘பி’ டீமாக இருக்க வேண்டாம். தமிழகத்தில் தினமும் கொலைகள் நடந்து வருகின்றன. என்கவுன்ட்டர் மட்டும் அதிகரிக்கவில்லை. காவல்நிலைய விசாரணைக் கைதிகூட கொல்லப்படுகிறார். திமுக ஆட்சியில் மக்களிடம் ஒழுக்க நெறிமுறைகள் கெட்டுப் போய்விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.