இந்திய விமானப் படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின், விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக விமான நிலைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
வான் சாகச நிகழ்ச்சி காரணமாக அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8 வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுக்கிறது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையைப் பகிர்ந்துள்ளது.
அதன்படி, முதன்முதலாக அக்டோபர் 1 ஆம் தேதி, 13:45 முதல் 15:15 வரை மூடப்படும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும்.
விமானப் பயண அட்டவணைகளைச் சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம், இந்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்து
செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | நிலமுறைகேடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்கு!