ஓட்டுநர் உரிமம் அச்சிடப்பட்டு வழங்கும் நடைமுறையை நிறுத்தப் போவதாகவும் எண்ம(டிஜிட்டல்) முறையில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கேரள மோட்டார் வாகனத் துறை அறிவித்துள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும், தொடர்ச்சியாக வாகனப் பதிவு சான்றிதழ்(ஆர்.சி.) உள்ளிட்டவையும் அச்சிடுவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மோட்டார் வாகனத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்திலும், வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாரிகளின் வசதியை கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி.. ரஜினி எப்படி இருக்கிறார்?
செலவு குறைப்பு நடவடிக்கை
கேரள மோட்டார் வாகனத் துறைக்கு அட்டைகளை அச்சிட்டுத் தரும் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் (ஐடிஐ) நிறுவனத்துக்கு ரூ. 15 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளதால், தற்போது அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஓட்டுநர் உரிம அட்டை உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலுவைத் தொகை காரணமாக அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஒரு காரணமாக இருந்தாலும், டிஜிட்டல் மூலம் வழங்கப்படும் முறை அதிக நன்மைகளை தரும்போது, அச்சுக்கு அதிக செலவு செய்வது தேவையற்றது.
மேலும், இந்த நடைமுறையானது, விரைவாகவும் எளிதாகவும் செய்வதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது என்றார்.
முதலில் ஓட்டுநர் உரிமம் அச்சிடும் பணி நிறுத்தப்படும், தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வாகனப் பதிவுச் சான்று அச்சிடுவது நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்மைகள் என்னென்ன?
ஓட்டுநர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிலாக்கர் செயலியில் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்தை தவறவிடும் பிரச்சிகளை இல்லை.
சோதனையின் போது, வாகன ஓட்டிகளின் டிஜிலாக்கரில் உள்ள க்யூ-ஆர் கோடை காவலர்கள் ஸ்கேன் செய்தால் முழு விவரங்களும் வந்துவிடும்.
ஓட்டுநர் உரிமம் அட்டையாக தேவைப்படுவோர், க்யூ-ஆர் கோட் மூலம் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டுக் கொள்ளலாம்.