Tuesday, October 1, 2024

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிறுத்தம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

திருப்பதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, லட்டு கலப்படம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டார். இந்த குழு கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி திருப்பதி திருமலையில் விசாரணை மேற்கொண்டது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்(சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து வரும் 3ம் தேதி வரை விசாரணையை நிறுத்துவதாக சிறப்பு புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி துவாரகா திருமலை ராவ் கூறுகையில், 'நாங்கள் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டோம். இதுகுறித்து சிலரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருவதால் எங்கள் விசாரணையை நிறுத்திவைத்துள்ளோம்' என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024