Sunday, October 6, 2024

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: மறுவாக்குப்பதிவு தேவையில்லை! – ஆணையம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இங்கு எந்தத் தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்னை ஏற்பட்டதாக 170 வழக்குகள் பதிவானது. இதில் 87 பிரச்னைகள் வாக்குப்பதிவு தினத்தின்போது பதிவானது.

இந்தத் தேர்தல்களில் அரசியல் பிரமுகர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த புகாரும் இல்லை எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3ஆம் கட்டமாக 65.65% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்றது. இரவு 7 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 65.65% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக சாம்பா மாவட்டத்தில் 73.45% வாக்குகள் பதிவானது. மிகவும் குறைவாக பாரமுல்லாவில் 55.73% வாக்குகள் பதிவானது.

படிக்க | செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 24 தொகுதிகள் ஜம்முவிலும், 16 தொகுதிகள் காஷ்மீரிலும் உள்ளன. முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் களம்கண்டனர்.

இதற்கு முன்பு, கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற 7 மாவட்டங்களில் நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதம் பதிவானது.

கடந்த 25-ஆம் தேதி 6 மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024