பிகாரில் எதிர்க்கட்சி செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பிகாரில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ், சஃபியாபாத் பகுதியில் வியாழக்கிழமை காலையில் நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில், பங்கஜ் மார்பில் குண்டு துளைத்தது.
இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரது உடலுக்கு ஆபத்தான நிலை எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில், பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் நவ்டோலியா பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர் என்றும், அப்பகுதியில் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறினார்.
இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளரான சீதாரஞ்சன் ககன், தனது எக்ஸ் பக்கத்தில் “நிதிஷ் அவர்களே, எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. கட்சியின் செயலாளர் மீது பகல் நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார். மேலும், ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மீது பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
சபாஷ்.. சரியான சவால்! ஓட்டு வேண்டுமா? இந்த நீரை குடியுங்கள்.. கிராம மக்கள் அதிரடி!!