பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜின் புகழ்பெற்ற கௌ கத் ஆசிரமத்தில் இருந்த அஷ்டதத்து சிலையை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பிக்கொடுத்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்திருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராதாகிருஷ்ணன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்த அஷ்டதத்து சிலை கடந்த வாரம் திருடுபோன நிலையில், செவ்வாயன்று மாலை, கோயிலுக்குள் அந்த சிலையுடன் ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அர்ச்சகர்களும் பக்தர்களும் ஆச்சரியமடைந்தனர்.
இதையும் படிக்க.. சபாஷ்.. சரியான சவால்! ஓட்டு வேண்டுமா? இந்த நீரை குடியுங்கள்.. கிராம மக்கள் அதிரடி!!
திருடன் எழுதியிருந்த கடிதத்தில், கோயிலுக்குள் நுழைந்து சுவாமி சிலைகளை திருடிச் சென்ற பிறகு, தனது மனைவி மற்றும் மகனுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உளவியல்பூர்வமாக, இந்த திருட்டால்தான் குடும்பம் பாதிக்கப்பட்டதாக நினைப்பதால், சிலைகளை திரும்பக்கொண்டு வந்து வைத்துவிட்டதாகவும், மன்னித்துக்கொள்ளும்படியும் தெரிவித்திருந்தார்.
காவல்துறையினர் இந்த கடிதம் குறித்து கூறுகையில், ஹிந்தியில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில், ராதா – கிருஷ்ணர் சிலைகளைத் திருடி நான் பாவம் செய்துவிட்டேன், இந்த தவறை செய்த பிறகு, எனக்கு மிக மோசமான சம்பவங்கள் நடந்தன, என்னால் தூங்கவோ, சாப்பிடவோ, ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்கவோ முடியவில்லை. நான் பணத்துக்காகத்தான் சிலைகளை திருடினேன். ஆனால், அதுநாள் முதல் என் மனைவி மற்றும் மகனுக்கு மிகப் பயங்கர உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருடப்பட்ட சிலைகளை, நல்ல முறையில் இரண்டு துணிகளால் சுற்றி கோயிலுக்குள் வைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.