Friday, October 11, 2024

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, வரும் அக்.29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து நவ 28ம் தேதி வரை, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். மேலும், https://voters.eci.gov.in/, ஆகிய இணையதள முகவரி மற்றும் 'வாக்காளர் உதவி கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இ்ந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் அக்.29ம் தேதி முதல் நவ.28ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பொதுமக்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

இக்காலகட்டத்தில்,பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான மனுக்களை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024