ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜம்ஷெட்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: குட் பேட் அக்லிஅஜித்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோரனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
நலம் விசாரித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடிமருத்துவமனையில் உள்ள சம்பயி சோரனை தொலைபேசியில் அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என்று முன்னாள் முதல்வரின் நெருங்கிய உதவியாளர் கூறினார்.
இதையும் படிக்க: ஆம் ஆத்மியுடன் கடவுள் இருக்கிறார்: கேஜரிவால்
பிரதமரின் அழைப்புக்கு சம்பயி சோரன் நன்றி தெரிவித்துள்ளார். தான் மிகவும் நன்றாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ஜேஎம்எம் தலைவர்களும் அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தனர்.
சோரனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் டாடா மெயின் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்த சம்பயி சோரன்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியிலிருந்த சம்பயி சோரன், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது முதல்வராக பொறுப்பேற்று மாநில நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வந்ததால், சம்பயி சோரன் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கட்சியில் தனக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி ஆக. 30ஆம் தேதி சம்பயி சோரன் பாஜகவில் இணைந்தார். மேலும், தனது எம்.எல்.ஏ. பொறுப்பையும் ராஜிநாமா செய்தார். இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.