தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை எக்ஸ் தளத்தில் கனிமொழி ஒப்புக்கொண்டதாக நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
சென்னையில் நேற்று(அக். 6) 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம். விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அந்த ஏற்பாடு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை மற்றும் மனமகிழ் மன்றத்தின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களிடையே கவலையாக உள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ. 3000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:குளிரூட்டும் வசதியுடன் அமர்ந்த அதிகார வர்க்கம்… சாமானிய மக்களை காக்கத் தவறியது ஏன்?
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காஷ்மீர், ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அங்கு சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.
வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 70 ஆண்டுக்குப் பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று உரிய முதலீடுகளைக் கொண்டு வராததால் முதலமைச்சரும் திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம். விமான கண்காட்சிக்கு சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கனிமொழியின் எக்ஸ் தளக் கருத்துக்கு, தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்திருக்கிறார். அதனை வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.