சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று(அக்.6) ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(அக்.6) இதுவரை இல்லாதவகையில், ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி நேற்று அளவுக்கு அதிகமாக மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
முன்னதாக ஒருநாளில் சராசரியாக 1.70 லட்சம் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் அதிகபட்சமாக இதற்கு முன்பாக கடந்த செப். 6-ம் தேதி 3,74,087 பேர் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விமானப் படை சாகச நிகழ்ச்சி: 30 பேர் மயக்கம்; 5 பேர் பலி!
விமானப் படை சாகச நிகழ்ச்சி
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி, இதைக் காண பொதுமக்கள் திரண்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மெரீனா பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதில், சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வந்தவா்களில் ஐந்து போ் உயிரிழந்தனா். அதிக வெப்பம் காரணமாக 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.