பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டு, 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த டேங்கர் வெடித்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், கொல்லப்பட்ட இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டு தங்களது கண்டனத்தை சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 26 போ் உயிரிழப்பு
அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன் இது வெளிநாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதல் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
குண்டுவெடிப்பு தொடர்பான விடியோக்களில் கார்கள் எரிந்து கொண்டு இருப்பதும், சம்பவ இடத்திலிருந்து புகை எழும்புவதும் காட்டப்பட்டுள்ளன. பின்னர் கடுமையான இராணுவ பாதுகாப்பு போடப்பட்ட அந்தப் பகுதி முற்றிலும் முடக்கப்பட்டது.
இது ஆயில் டேங்கர் வெடிப்பாக இருக்கலாம் என்றும், குண்டுவெடிப்பின் நோக்கம் மற்றும் காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227-ஆக அதிகரிப்பு
உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால், செய்தியாளர்களிடம் எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
இந்த வெடிகுண்டு சம்பவம் விமான நிலையத்தின் கட்டிடங்களை உலுக்கியதாக அதில் வேலை பார்க்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் சாலை அமைக்கும் பெய்ஜிங் மல்டிபில்லியன் டாலர் திட்டத்தில் பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான சீனர்கள் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.