தில்லி கலவரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவர் உமர் காலித்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி நவின் சாவ்லா தலைமையிலான அமர்வு கூடாததால், நவ. 25ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமர் காலித்தின் ஜாமீன் மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இதே வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாம் மற்றும் பிற மாணவர்களுடன் இணைந்து ஜாமீன் கோரி புதிய மனுவை உமர் காலித் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதிபதிகள் நவின் சாவ்லா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தி ஆதரவா?
வடகிழக்கு தில்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூலையாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமர் காலித்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலித்தின் ஜாமீன் மனு ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்து வருகிறார்.
நீதிபதி விலகல்
நீதிபதிகள் பிரதிபா எம். சிங், நீதிபதி சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஜூலை மாதம் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமித் சர்மா வழக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, மற்றொரு அமர்வுக்கு மாற்றி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.