அதிமுக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?
கடந்த 6 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் தொடக்கி வைத்த சம்பவம் சர்ச்சையான நிலையில், அதிமுக தலைமை அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.