உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்ததில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராகத்கஞ்ச் கிராமத்தில் உள்ள முகமது ஃபரூக் என்பவரது வீட்டில் திங்கள்கிழமை சிலர் சட்டவிரோதமான பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் முகமது என்ற தூபன்(17) சிகிச்சையின்போது லக்னௌவில் உயிரிழந்தார். மேலும் ஆகாஷ் (15) மற்றும் லல்லு (30) ஆகியோர் மூவர் என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அலட்சியமாக இருந்த ராகத்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் சுனில் திவாரி மற்றும் காவலர்களான கௌரவ் மிஸ்ரா மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி செய்வதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.