ஜம்மு-காஷ்மீரின் தோடா சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்தார்.
தோடா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் கஜய் சிங் ராணாவை எதிர்ப்பு போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: பதட்டமும் பதற்றமும், ஆறும் ஆர்-ம்! பிழையற்ற தமிழ் அறிவோம்! – 4
ஆம் ஆத்மியின் வேட்பாளரான மெஹ்ராஜ் மாலிக் – 23,228 வாக்குகளும், பாஜகவின் வேட்பாளர் கஜய் சிங் ராணா – 19,690, தேசிய மாநாட்டுக் கட்சியின் காலித் நஜிப் – 13,334 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,
தோடா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவிற்கு எதிராக மெஹ்ராஜ் மாலிக் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். நீங்கள் நன்றாக தேர்தலை எதிர்கொண்டீர்கள்.
ஐந்தாவது மாநிலத்தில் எம்எல்ஏவாக தடம் பதித்ததில் மகிழ்ச்சி, ஒட்டுமொத்த கட்சிக்கும் வாழ்த்துகள் என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஹாங்காங் சிக்ஸர் தொடரில் விளையாடும் இந்திய அணி!
பஞ்சாப், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் மற்றும் கோவாவிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர்.
மாலிக்கின் "அற்புதமான வெற்றி" மூலம் அரவிந்த் கேஜரிவாலின் புரட்சி ஜம்மு-காஷ்மீரை அடைந்துள்ளது என்று கட்சியின் மூத்த தலைவரும் தில்லி முதல்வருமான அதிஷி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 90 இடங்களில் ஆம் ஆத்மி 7 இடங்களில் போட்டியிட்டது. வெற்றியைக் கொண்டாடும் வகையில் மண்டி ஹவுஸ் அருகே உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.