ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
பாஜக 29 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.. தனித்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.
எதிர்பாராத வெற்றி
இந்நிலையில் வெற்றி பெற்ற பிறகு ஒமர் அப்துல்லா செய்தியாளர்களுடன் பேசியதாவது,
''முற்றிலும் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் கிடைத்துள்ளன. நாங்கள் எதிரபார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல் வெற்றி சிறப்பு மிக்கது. தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காதவர்கள் கூட இம்முறை வாக்களிப்பார்கள் என கருதினோம். பாஜகவின் சதிகளையும் தாண்டி மக்களின் வாக்குகள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் மற்றும் என் மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்தவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். முதல்வர் பதவிக்காக நான் உரிமைகோரவில்லை. இது தேசிய மாநாட்டுக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் முடிவைப் பொறுத்தது'' எனக் குறிப்பிட்டார்.