2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(அக். 9) வேதியியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இருவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது
கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும் புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் ஒரு பாதியும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க | மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா்.
தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படுகிறது.