சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.
இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க | சாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இன்று வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | சாம்சங் தொழிலாளர்கள் கைது: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
அதன்படி இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள்முருகன் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை பதில் அளித்தது.
இறுதியில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறிய வழக்கை ஒத்திவைத்தது.