திருச்செந்தூர்: திருச்செந்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை(யாத்ரி நிவாஸ்) அக்.14 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ. 100 கோடி என ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக பெருந்திட்ட வளாகப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதேபோல் திருக்கோயில் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகள் பணியும் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதன்கிழமை காலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க |சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்! நள்ளிரவில் பந்தல் அகற்றம், சங்க நிர்வாகிகள் கைது!
அப்போது திருச்செந்தூரில்பக்தர்கள் தங்கும் விடுதியை அக்.14 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்றார்.
ஆய்வின் போது தமிழக சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆணையர் சுகுமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.