திருப்பூர்: உடுமலை அருகே ஜீப், டெம்போ டிராவலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உடுமலை, கருப்புசாமி புதூர் அருகே ஜீப், டெம்போ டிராவலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க |தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்
இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தியாகராஜன்(45), அவரது மனைவி ப்ரீத்தி(40), மகன் ஜெயபிரியன்(11), தாயார் மனோன்மணி(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தியாகராஜனின் தந்தையும், மற்றொரு மகனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெம்போ டிராவலரில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.