உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரத்தன் நவல் டாடா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று(அக். 9) அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008-ஆம் ஆண்டு டாடாவுக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் ஆளுமையாகவும் திகழ்ந்த ரத்தன் நவல் டாடாவின் மறைவு ஒட்டுமொத்த தேசத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.