சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று அல்லது நாளை நேரில் சந்திக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நீடிக்காத வகையில் சுமூகமான தீர்வு காண – உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவல் துறைக்கு கண்டனம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை காவல் துறையினர் இன்று (அக். 9) கைது செய்தனர். முன்னதாக போராட்டக் களத்தில் இருந்த பந்தல்களை நேற்று இரவு காவல் துறையினர் அகற்றினர்.
சில தொழிலார்களை இரவில் வீடு புகுந்து கைது செய்தனர். காவல் துறையின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் சாம்சங் தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்தனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
முதல்வரை சந்திக்கத் திட்டம்
பின்னர் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன்,
''சாம்சங் தொழிலாளர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தைய எதிர்க்கவில்லை; அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம். தொழிலாளர்கள் அமைதியாகப் போராடிய நிலையில், வழக்குப் பதியப்பட்டுள்ளது'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் தடையில்லை: உயர்நீதிமன்றம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, ''கடந்த 9ஆம் தேதியிலிருந்து 1,500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள், அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், சுமுகமான தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்றைக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு எதிராக கடைபிடிக்கக் கூடிய இத்தகைய நடவடிக்கைகள் ஆரோக்யமானது இல்லை. ஜனநாயகப்பூர்வமான நடவடிக்கை அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித்தராது.
இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்த பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயமாக முதல்வர் இதில் தலையிட்டு, சுமூகத்தீர்வு காண்பார் என்று நாங்கள் நம்புகிறோம்'' என கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.