எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | சாம்சங் தொழிலாளர்களுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு!
அதைத்தொடர்ந்து 4 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நெடுந்தீவு முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் சிறையில் வாடும் மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.