ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளது. இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையமான(என்.ஹெச்.சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகல் 12 மணி நிலவரப்படி(அமெரிக்க நேரப்படி), ஃபுளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள மில்டன் புயல், அதிகபட்ச வேகமாக மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையமான(என்.ஹெச்.சி) தெரிவித்துள்ளது. மிக ஆபத்தான புயலாக அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு, டாம்பா நகரில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றும் என்.ஹெச்.சி எச்சரித்துள்ளது.
இதையடுத்து, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட டாம்பாவில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டே வார கால இடைவெளியில் 2 புயல்களின் தாக்கத்தை எதிர்கொள்ள இப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர். முன்னதாக கடந்த செப். 26-ஆம் தேதி இப்பகுதிகளில் ஹெலீன் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.. அமெரிக்காவை நெருங்கும் அதி தீவிர புயல்!
மில்டன் புயலால் ஃபுளோரிடா மாகாணாத்தில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து, அங்கு வாழ்வா சாவா என்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும், இதையடுத்து மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.