ஹரியாணா: 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

ஹரியாணாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில், இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆளும் பாஜகவுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுயேச்சை எம்எல்ஏக்களான தேவேந்திர காத்யான் மற்றும் ராஜேஷ் ஜூன் ஆகிய இருவரும் பாஜகவுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.

ராஜேஷ் ஜூனும் பாஜகவில் இருந்து பிரிந்து சென்றவர்தான். பின்னர் சுயேச்சை வேட்பாளராக தனித்துப் போட்டியிட்டு வந்தார். ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கா தொகுதியில் ராஜேஷ் வெற்றி பெற்றார். பாஜக போட்டியாளரான தினேஷ் கௌசிக்கை தோற்கடித்து எம்எல்ஏ ஆகியிருக்கிறார்.

காத்யான் சோனிபட்டில் உள்ள கானவூர் தொகுதியில் போட்டியிட்டு 35,209 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான குல்தீப் சர்மாவை தோற்கடித்தார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். ஹிசார் தொகுதியில் இருந்து பாஜக தலைவர் நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஹரியாணாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநிலத்தின் இணை பொறுப்பாளரான திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் ஆகியோரை சந்தித்தனர். அப்போது மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி உடனிருந்தார்.

பாஜக அரசு பதவியேற்றவுடன் காத்யானும் ஜூனும் தங்கள் ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக ஹரியாணா பாஜக தலைவர் மோகன் லால் படோலி கூறினார்.

மேலும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பாரி என கூறப்படுகிறது. அவரும் இன்று அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை வென்று, ஆட்சியைத் தக்கவைக்கவும், காங்கிரஸின் மறுபிரவேச முயற்சியை முறியடிக்கவும், ஆளும் பாஜக மாநிலத்தில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024