Sunday, October 20, 2024

4 முறை காதல் தோல்வி.. திருமணம் குறித்து ரத்தன் டாடா கூறியது!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, நான்கு முறை காதல்வயப்பட்டதாகவும், யாருமற்ற வீட்டுக்குத் திரும்பும்போது தனிமையை உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக் குறைவால் அக். 9ஆம் தேதி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 86.

எளிமைக்கும் கருணைக்கும் உதாரணமாக வாழ்ந்த ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவேயில்லை. இது குறித்து அவர் பல்வேறு நேர்காணல்களில் அளித்த தகவல்கள்..

தான் நான்கு முறை காதல் வயப்பட்டதாகவும், உறவு மேம்படுவதற்கு முன்பே, சூழ்நிலைகள் அனைத்தும், என்னை திருமணத்திலிருந்து தள்ளிவைத்துவிட்டது என்று அவரே தனது வாழ்வு குறித்து பேசியிருந்தார்.

சில வேளைகளில் தனிமையை உணர்ந்திருப்பதாகவும், தனக்கு வாழ்க்கைத் துணை இல்லையே என்று வருந்தியிருப்பதாகவும் கூட அவர் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க.. இனி என் வாழ்நாளை… ரத்தன் டாடாவின் இளம் மேலாளர் சாந்தனு பதிவு

இதுபோன்றதொரு நேர்காணலில்தான், ரத்தன் டாடா தனக்கு 63 வயதாக இருக்கும் போது, வாழ்க்கைத் துணையாக மிகச் சிறந்த நபரை சந்தித்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கதாக உள்ளது.

அதோடு, எந்த ஒருவேலையையும் செய்ய தாமதமாகிவிட்டது என்பதே கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்றுமொருமுறை, திருமணம் செய்துகொள்வது குறித்து சிந்தித்ததே இல்லையா? என கேட்டதற்கு, ஆமாம், இருந்திருக்கிறது, பல முறை திருமணத்துக்கு கிட்டத்தட்ட நெருங்கிச் சென்றிருக்கிறது என்றார். பிறகு ஏன் திருமணம் நடக்கவில்லை என்று கேட்டதற்கு, பல முறை, பல வித்தியாசமான பிரச்னைகளால் திருமணம் நடைபெறாமல் போய்விட்டது. வழக்கமாக, பணி நிமித்தமான அழுத்தம், குடும்ப வாழ்க்கை என்பது இரண்டாம் பட்சமாக மாறியது, போன்றவைதான் என்றும், எனது வேலை முதல் பிரதானமாக இருந்ததே, திருமணத்துக்குள் நுழைய முடியாமல் போகக் காரணமாகிவிட்டது என்றார்.

இப்போது திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பீர்களா? என்று கேட்டதற்கு, நான் எப்போதுமே ஒரு செயலை செய்ய தாமதமாகிவிட்டது என்று எண்ண மாட்டேன். வாழ்க்கைத் துணைக்கான சரியான நபரை, சரியான எண்ணங்களைக் கொண்டவரை சந்தித்தால் திருமணம் செய்வேன் என்று மிக அழகாக பதிலளித்திருந்தார்.

மற்றொரு ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், அமெரிக்காவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்ததாகவும், ஆனால், இந்தியா – சீனா மோதலால் அது முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டிருந்தார். நான் இந்தியா திரும்ப நேர்ந்தது, ஆனால் அப்போது அவரால் என்னுடன் வர முடியவில்லை. பிறகு அவர் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார் என்று சற்று வருத்தத்துடன் ரத்தன் டாடா பகிர்ந்திருந்தார்

நான் நான்கு முறை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இறங்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அது ஓரிடத்தில் முடிந்துவிடும், அப்போதெல்லாம் எனக்கு பல விஷயங்கள் அச்சத்தை ஏற்படுத்திவிடும், ஆனால், பலரையும் பார்க்கும்போது, திருமணம் ஒன்றும் அவ்வளவு மோசமானதாக இருந்திருக்காது என்றுதான் நினைப்பேன். திருமணம் சில விஷயங்களை சிக்கலாக்கியிருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வாழ்க்கைத் துணை இல்லையே நமக்கென்று ஒரு குடும்பம் இல்லையே என்று வருந்தியது உண்டு எனவும், யாருமற்ற வீட்டுக்கு திரும்பும்போதெல்லாம் தனிமை வாட்டும் என்றும் அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024