38 வயதாகும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் வரும் டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தனது சொந்த நாடான ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் ரஃபேல் நடால். ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் இவர்களுடன் சேர்த்து டென்னிஸ் உலகில் பிக் த்ரீ என்று அழைக்கப்படுகிறார்.
தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சிடம் 2ஆவது சுற்றில் தோல்வியுற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் அல்கராஸுடன் சேர்ந்து காலிறுதிக்கு முன்னேறினார். அதிலும் தோல்வியுற்றதால் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமலே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாகவே காயம் காரணமாக ரஃபேல் நடால் பிரச்னைகளை சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
உண்மையை சொல்லவேண்டுமானால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் சிறமப்பட்டேன். என்னால் கட்டுப்பாடு இல்லாமல் விளையாட முடியுமென நினைக்கவில்லை. இந்த முடிவை எடுப்பது கடினம்தான். ஆனால், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் தொடக்கமும் முடிவும் இருக்கிறது.
டேவிஸ் கோப்பையில் விளையாடும்போது ஒரு முழுமையான வட்டத்தை அடைவது போலிருக்கிறது. 2004இல் டேவிஸ் கோப்பைதான் எனது தொழில்முறை டென்னிஸின் மகிழ்ச்சி தொடங்கியது.
எனது நாட்டுக்காக எனது கடைசி போட்டியை விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை நான் அடைந்ததெல்லாம் கனவு நனவாகியதுபோல்தான் இருக்கிறது. எனது சிறந்தவற்றை என்னால் முடிந்தளவுக்கு கொடுத்த மன நிம்மதி இருக்கிறது.
நான் நினைத்ததைவிடவும் வெற்றிகரமாக விளையாடியுள்ளேன். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரமெனக் கருதுகிறேன் என்றார்.