நவம்பர் மாதம் தொடங்கும் பார்டர்- கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரானத் தொடரின் முதல் அல்லது 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை ரோகித் சர்மா தவறவிடலாம் என்று பிசிசிஐயிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி நவம்பர் 22-ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற உள்ளது, இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
அவரின் நிலைமைப் பற்றி முழுமையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட பிரச்னை காரணமாக தொடரின் தொடக்கத்தில் இரண்டு டெஸ்டில் ஒன்றைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
ரோஹித் ஒரு டெஸ்டில் விளையாடாமல் போனால் அவருக்குப் பதிலாக, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரனை சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்கு அதிகாரபூர்வ துணைக் கேப்டன் இல்லாததால், டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறுகையில், “இந்திய அணியில் நிறைய ஐபிஎல் கேப்டன்கள் உள்ளனர். ஷுப்மன் கில், ரிஷப் பந்த் போன்றவர்கள் அவர்கள் அணிகளை வழிநடத்தியவர்கள்” என்று கூறியிருந்தார்.
இந்திய அணியின் ஒருநாள் அணி துணைக் கேப்டன் ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.