பத்மவிபூஷண் விருதுபெற்ற, செய்யும் தொழிலால் தொழிலதிபர் என அழைக்கப்பட்டாலும், மக்கள் மனங்களால் தன் சொந்த உறவாகக் கருதப்பட்ட ரத்தன் டாடா மறைந்தார். அவரது உடலுக்கு மும்பை ஓர்லி சுடுகாட்டில் முழு மாநில அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரத்தன் டாடா கடந்த திங்கள்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை இரவு அவரது உயிர் பிரிந்தது.
இந்த நாளில், கடந்த 26/11 மும்பை தாக்குதலின்போது அவர் தாஜ் ஓட்டல் வாசலிலேயே அந்த மூன்று நாள்களும் நின்றிருந்ததை பலரும் நினைவுகூருகிறார்கள்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், தாஜ் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். 26/11 தாக்குதலின்போது 166 பேர் பலியாகினர். இதில் 33 பேர் தாஜ் ஓட்டல் ஊழியர்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க: ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்திய வளர்ப்பு நாய்!
அப்போது 70 வயதான ரத்தன் டாடா, தாஜ் ஓட்டல் வாசலிலேயே நின்று, பாதுகாப்புப் படையினர், ஓட்டலுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணி முழுமையையும் உடனிருந்து கவனித்துவந்தார்.
பிறகு, தாஜ் ஓட்டலை திறந்தபிறகும், பலியான ஊழியர்களின் குடும்பங்களின் நலனுக்கு பொறுப்பேற்பதாகவும் உறுதிமொழி அளித்து அதன்படியே செய்தும்காட்டினார்.
தாஜ் ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் அவர் முழுக்க முழுக்க அங்கேயே நின்று, ஓட்டலுக்குள் சிக்கியிருந்தவர்களின் மொத்த நலனையும் வேண்டிக்கொண்டிருந்ததாகவும், தாஜ் ஓட்டல் ஊழியர்கள் எப்போதும் தங்களது அனுபவத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு மாதந்தோறும், அதே ஊதியத்தை தொடர்ந்து ரத்தன் டாடா வழங்கி வந்ததாகவும் தகவல்கள் உண்டு.