பாகிஸ்தானின் தென்மேற்கில் நிலக்கரி சுரங்கம் அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 20 பேர் பலியாகினர், 7 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துமைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், அமைதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனாவின் உயர்மட்ட பிரிதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படிக்க |இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 22 பேர் பலி
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஹூமாயுன் கான் நசீர் கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துகி மாவட்டத்தில் உள்ள தனியார் நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 தொழிலாளர்கள் பலியாகினர், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்களில் 17 பேர் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் மூன்று பேரும், காயமடைந்தவர்களில் மூன்று பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.