டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் இன்று (அக். 11) 2 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
இந்தியத் தொழிலதிபரும் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா நேற்று முன் தினம் (அக். 9) நள்ளிரவு காலமானார். எனினும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்திலேயே இருந்தன.
எனினும் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் சரிந்து சென்செக்ஸ் பட்டியலில் 4,128.80 ஆக விற்பனையானது. நவம்பர் மாத காலாண்டில் போதிய எண்ணிக்கையில் முதலீட்டாளர்களைக் கவர தவறியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?
நிறுவனத்தின் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.36,036.16 கோடி குறைந்து ரூ.14,93,835.97 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் மிகவும் பிரபலமான நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது.
நிகர லாபம் அதிகரிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வணிக நேர தொடக்கத்தில் 256.75 புள்ளிகள் குறைந்து 81,354.66 ஆக வர்த்தகமானது. இது மொத்த வணிகத்தில் 0.31% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 45.05 புள்ளிகள் சரிந்து 24,985.30 புள்ளிகளாக வர்த்தகமானது. மொத்த வணிகத்தில் இது 0.18% சரிவாகும்.
நேற்றைய பங்குச் சந்தை நிலவரப்படி, செப்டம்பர் மாத காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 4.99% அதிகரித்து ரூ.11,909 கோடியாக இருந்தது.
இதே காலகட்டத்தில் டாடா குழுமத்தின் நிகர லாபம் 7.06 சதவீதம் உயர்ந்து, ரூ. 64,988 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 60,698 கோடியாக இருந்தது.