பொன்னேரி அருகே பயணிகள் ரயில் விபத்துக்குள்ளான பகுதிக்கு, வெள்ளிக்கிழமை(அக். 11) நள்ளிரவு சென்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீட்புப்பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.
விபத்தில், இந்த ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. துரிதகதியில் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில், விபத்துக்குளான பயணிகள் ரயிலில் பயணித்த 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து மீட்கப்பட்டவர்களில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை உறுதிசெய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.