20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 14-ஆவது போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் வெள்ளிக்கிழமை(அக். 11) பலப்பரீட்சை நடத்தின.
துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 82 ரன்கள் மட்டுமே திரட்டியது. அந்த அணியில் 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆஸ்லி கார்ட்னெர் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 83 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எல்லைக்கோட்டிற்கு வெளியே சிதறடித்தது.
கேப்டன் அலீஸா ஹீலியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 11 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 83 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்லி கார்ட்னெருக்கு இந்த ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான பரிசு அளிக்கப்பட்டது.
20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் இன்று நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இலங்கை. இரண்டாவது ஆட்டத்தில், வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.