கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுந்த பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹூட் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து உடுப்பி காவல் கண்காணிப்பாளர் அருண் கே கூறுகையில், முகமது மானிக் என்பவர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மங்களூரு விமான நிலையத்திலிருந்து துபைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளி ஜார்க்கண்ட் வனப்பகுதியில் இருந்து கைது
விசாரணையில், ஹூட் கிராமத்தில் மேலும் ஏழு வங்கதேசத்தினர் தன்னுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். உடனே இதுகுறித்து உடுப்பிட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேலும் ஏழு பேரையும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போலி ஆதார் அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆதார் அட்டைகளை எவ்வாறு பெற்றனர் என்றும் வங்கதேசத்தில் இருந்து அவர்கள் எப்படி எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
8 வங்கதேசத்தினர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.