Saturday, October 19, 2024

வங்கதேசத்தில் துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

வங்கதேசத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அங்குள்ள ஹிந்து கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சனிக்கிழமை நேரில் சென்றாா்.

வங்கதேசத்தின் மொத்த மக்கள்தொகை 17 கோடி. இதில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை சுமாா் 8 சதவீதமாகும். அந்நாட்டில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போதும், அவா் பதவி விலகிய பிறகும் அங்கு ஹிந்துக்களின் சொத்துகள், வியாபார தலங்கள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் பழைய டாக்கா பகுதியில் உள்ள தாந்தி பஜாரில் துா்க்கை பூஜை மண்டபம் மீது சிலா் பெட்ரோல் குண்டு வீசினா். அந்த குண்டு விழுந்து தீப்பிடித்ததில் சுமாா் 5 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தாந்தி பஜாா் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள நூற்றாண்டுகள் பழைமையான தாகேஸ்வரி தேசிய கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சனிக்கிழமை நேரில் சென்றாா். அங்கு துா்கை பூஜை பண்டிகையையொட்டி ஹிந்து சமூகத்தினருக்கு அவா் வாழ்த்துத் தெரிவித்தாா். அந்நாட்டைச் சோ்ந்த ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதி செய்யும் வகையில், வங்கதேசத்தை கட்டமைக்க விரும்புவதாக கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் தெரிவித்தாா்.

கடந்த அக்.1 முதல் வெள்ளிக்கிழமை வரை, வங்கதேசத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களையொட்டி நடைபெற்ற 35 அசம்பாவிதங்கள் தொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டு, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.

துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கும், அந்நாட்டின் சாத்கிரா பகுதியில் ஜெஷோரீஸ்வரி காளி கோயிலுக்குப் பிரதமா் மோடி பரிசளித்த கிரீடம் திருடப்பட்ட சம்பவத்துக்கும் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், அவா்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாப்பாக இருப்பதை வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024