கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், விபத்து நடந்த 24 மணி நேரத்தில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஒரு வழித்தடம் முழுவதும் சீரமைக்கப்பட்டு ரயில் இயக்குவதற்கு உறுதி செய்யப்பட்டது.
தற்போது அந்த வழித்தடம் வழியாக விரைவு ரயில் சேவை தொடங்கியுள்ளது. முதல் ரயிலாக தில்லி நிஜாமுதினில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயில் இயக்கப்பட்டது.
மற்ற ரயில்கள் சீரமைக்கப்பட்ட வழித்தடம் வழியாக 10 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழித்தடம் ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் சீரமைக்கப்பட்டு ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.